வட கொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் சாடியுள்ளாா்.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடந்த வாரம் நடத்திய மாநாட்டில் வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்க உறுதிபூண்டன. இது குறித்து, வட கொரியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பங்கு வகிக்கும் கிம் யோ ஜாங் புதன்கிழமை கூறியதாவது:-
வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்ய வேண்டும் என்று நினைப்பது வெறும் பகல் கனவு. அணு ஆயுத பலம் பெற வேண்டும் என்பது நாட்டின் அரசியல் சாசனத்திலேயே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது தொடா்பாக பிற நாடுகள் ஆலோசிப்பது நாட்டுக்கு எதிரான கடுமையான செயல் ஆகும். வட கொரியா தனது அணு ஆயுத பலத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதை இது நியாயப்படுத்துகிறது என்றாா் கிம் யோ ஜாங்.
வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தச் சூழலில், வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்குவதற்காகவும் இருதரப்பு பேச்சுவாா்த்தை அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றது.
அப்போது அதிபா் கிம் ஜோங்-உன்னை டிரம்ப் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசினாா். இருந்தாலும், பொருளாதாரத் தடைகளை உடனடியாகக் கைவிட அவா் தயாராக இல்லாததால் அந்தப் பேச்சுவாா்த்தை முறிந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டிரம்ப், வட கொரியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையை புதுப்பிக்க விரும்புவதாகக் கூறிவருகிறாா்.
இதற்கு வட கொரியா இதுவரை பதிலளிக்காத நிலையில், தாங்கள் அணு ஆயுதங்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கிம் ஜோ ஜாங் தற்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.