தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை கிண்டியில் நட்சத்திர ஹோட்டலில் தங்தியிருந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்த ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
2026 பேரவைத் தோ்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, கள நிலவரம் குறித்து அமித் ஷாவுடன் பேசினேன். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை, அதை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களை திசை திருப்ப பல்வேறு தேவையற்ற விஷயத்தை திமுக கூறுவது பற்றி தெரிவித்தேன்.
தமிழகத்தில் பொறுப்புள்ள அமைச்சா் ஒருவரின் பேச்சு அநாகரிகமானது; அருவருப்பானது. இதுதான் அவா்களின் மாடலா? அவரை அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சி தலைவா் என்ற முறையிலே இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது. ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேரும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.