மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன் என்று அண்ணாமலை கூறினார்.
கடந்த 2024 டிசம்பரில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), பொது வெளியில் வெளியானது. அப்போது, கோவையில் டிசம்பர் 26-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ‘‘திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்’’ என்று சபதம் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக நேற்று பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் விழாமேடையில், ‘‘திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அண்ணாமலை சபதம் ஏற்றார். ஆட்சி மாற்றத்துக்காக அமித் ஷா நேற்றே அடிக்கல் நாட்டிவிட்டார். அதனால், அண்ணாமலை மீண்டும் காலணி அணிந்துகொள்ள வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்து, புதிதாக வாங்கி வந்த காலணியை அண்ணாமலையிடம் கொடுத்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்று முதல் நான் பா.ஜ.க.வின் சாதாரண தொண்டன். மாநிலத் தலைவர் சொல்வதை கேட்பது எங்கள் கடமை. மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன். நிச்சயமாக தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.