அமலாக்கத் துறை சம்மன் அரசியல் பழிவாங்கல்: ராபர்ட் வதேரா!

குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக ஆஜராவதற்கு டெல்லியுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு இன்று (ஏப்.15) சென்றார். வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

நான் மக்களுக்காக பேசும் போது எல்லாம் அவர்கள் என்னை ஒடுக்கப்பார்க்கிறார்கள். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவர்கள் விசாரணை அமைப்புகளின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள். என்னிடம் மறைப்பற்கு எதுவும் இல்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை. விசாரணைக்கு எப்போது தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளோம். இன்று இந்த வழக்குக்கு ஒரு முடிவு வரும் என்று நான் நம்புகிறேன்.

மக்கள் என்னை நேசிக்கிறார்கள், நான் அரசியலுக்கு வருதை விரும்புகிறார்கள். நான் அரசியலில் இணையும் எனது விருப்பத்தைத் தெரிவித்ததும், அவர்கள் பழைய வழக்குகளை மீண்டும் கொண்டு வந்து என்னைத் தடுக்கப் பார்க்கிறார்கள். நாட்டின் நலனுக்காக நான் போகும் போதெல்லாம் தடுத்து நிறுத்தப்படுகிறேன். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார். பாஜக இதனைச் செய்கிறது. உண்மையான பிரச்சினையை திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

ஒன்றுமே இல்லாத வழக்கு இது. இதுதொடர்பாக கடந்த 20 ஆண்டுகளில் 15 முறை எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் 10 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா அரசியலில் இணைய விரும்பவதாக நேற்று திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். தனது குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் அரசியலில் இணைவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நில பேரம் தொடர்பான பணமோசடி வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்குத் தொடர்பாக ஏப்.8-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.