பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகிய 3 திமுக அமைச்சர்கள் மீது அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களையும், மதங்களையும் ஆபாசமாக பேசியதற்காக அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி துறையில் நடைபெற்ற ஊழலுக்காக அமைச்சர் கே.என்.நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் அளித்துள்ளது அதிமுக. தாங்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அவையில் விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “அவையில் உள்ள அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவு இடம் முறையிட்டோம். கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம். கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது முழுவதும் ஏமாற்று வேலை. அதிமுகவினரை தொடர்ந்து புறக்கணிப்பதிலேயே சபாநாயகர் நேரத்தை செலவிடுகிறார்” என விமர்சித்துள்ளார்.