வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் ஆங்காங்கே கலவரமும் ஏற்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல் துறை வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தப்பட்டது. தண்டவாளங்களில் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 200க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூர்ஷிதாபாத் பகுதிகளில் கலவரத்தை கட்டுப்படுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மூர்ஷிதாபாத் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி நேற்று திங்கள்கிழமை(ஏப். 14) கூறுகையில், “நாம் ஒருமுறைதான் வாழ்ந்து உயிரிழக்கிறோம். அப்படியிருக்கும்போது, கலவரம் எதற்கு? ஒவ்வொரு சாதிக்கும் மதத்துக்கும் போராடுவதற்கான உரிமை உள்ளது. ஆனால், அதற்காக சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு சிலர் உங்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு கவனம் செலுத்தாதீர்கள்” என்றார்.