முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு இந்தியாவிலேயே முன்மாதிரி நடவடிக்கையாகும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.
தமிழக முதல்-அமைச்சரின் மாநில சுயாட்சி முன்னெடுப்பை வரவேற்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. ஆட்சியில், மாநிலங்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சி பறிக்கப்பட்டு, கூட்டாட்சி தத்துவம் பலவீனப்படுத்தப்பட்டு வரும் சூழலில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை வலியுறுத்தி, மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சியாகும்.
கூட்டாட்சி தத்துவம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் இச்சூழலில், தமிழக முதல்-அமைச்சரின் இந்த முன்னெடுப்பு இந்தியாவிலேயே முன்மாதிரி நடவடிக்கையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளை வலுப்படுத்தவும், மாநிலங்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சியைப் பாதுகாக்கவும் இந்த முயற்சி முக்கிய பங்காற்றும் என நம்புகிறோம். இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழக முதல்-அமைச்சரின் இத்தகைய முன்னெடுப்பை மனதார வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.