குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக தொழிலதிபர் ராபர்ட் வதேரா 2-வது நாளாக அமலாக்கத் துறை அலுவகத்தில் ஆஜரானார். அவரை பிரியங்கா காந்தி அலுவலக வாசலில் கட்டியணைத்து அன்பைப் பரிமாறி அனுப்பி வைத்தார்.
ஹரியானா மாநிலம் குருகிராம் நிலமோசடி வழக்குத் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, தொழிலதிபரும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ராபர்ட் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அவருடன் அவரது மனைவியும் வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியும் வந்தார். ராபர்ட் அலுவலகத்துக்குள் செல்லும் முன்பு பிரியங்கா தனது காரில் இருந்து இறங்கி தனது கணவரைக் கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறி அனுப்பி வைத்தார். பின்பு ராபர்ட் விசாரணைக்காக அலுவலகத்துக்கு உள்ளே சென்றதும், பிரியங்கா அமலாக்கத்துறை அலுவலக தலைமையகத்தில் உள்ள காத்திருக்கும் அறையின் உள்ளே காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு நடந்த நிலமோசடி தொடர்பான இந்த வழக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை ராபர்ட் வதோராவிடம் அமலாக்கத்துறை ஐந்து மணிநேரம் விசாரணை நடத்தியது. அவரிடம் பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமலாக்கத்துறையின் புகாரின் படி, தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் நிறுவனம் குருகானின், ஷிகோபுரில் கடந்த 2008, பிப்ரவரியில் ஒம்காரேஷ்வர் பிராப்பட்டிசிடமிருந்து ரூ. 7.5 கோடிக்கு வாங்கியது. பின்பு அந்த நிலம் டிஎல்எஃப்-க்கு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கையே அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் பணமோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கருதுகிறது.
இந்த விசாரணை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ராபர்ட் வதேரா, “இது மிகவும் துரதிருஷ்டவசமானது. அரசின் தவறுகளை அம்பலப்படுத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுக்க அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையும், பிற விசாரணை அமைப்புகளும் பயன்படுத்தப்படுவதை மக்கள் உணர்ந்திருப்பதால் அவர்கள் இனி அதனை நம்பமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த அரசு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்க முயற்சிக்கிறது. இவை எல்லாம் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைத் திருப்பவே நடக்கிறது. நான் மக்களின் குரலாக மாறியிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். தற்போது நான் ஒரு ஆர்வலரைப் போல இருக்கிறேன். மக்கள் என்னுடன் இருக்கிறார்கள், நான் அவர்களுக்காக சேவை செய்கிறேன், அவர்கள் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.