யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய அரசு விளக்கம்!

ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

யுபிஐ செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்பட பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது தற்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை. ஆனால் இனி வரும் காலத்தில் யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது.

அதாவது, அனைத்து யுபிஐ செயலிகளிலும் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமான பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் மத்திய நிதி அமைச்சகம் வசம் உள்ளது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக இதுபற்றி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முடிவு செய்வார் என்று செய்திகள் பரவின.

இந்த நிலையில், அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கூறியிருப்பதாவது:-

யுபிஐ வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்வதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை. எனவே, 2 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என பரவும் தகவல் பொய்யானது” என்றனர்.