குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் பகல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதுதொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் பகல்காம் தாக்குதல் தொடர்பாக குடியரசுத்தலைவரிடம் அமைச்சர்கள் விளக்கமளிப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி – வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் வரத் தடை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப். 27 முதல் ரத்து செய்யப்படுவதாகவும் மருத்துவ விசாக்களுக்கு ஏப். 29 வரை காலக்கெடு நிர்ணயித்தும் அதற்குள்ளாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விளக்கமளித்தும் வருகிறது.