கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருடம் சிறை: புதிய சட்ட முன்வடிவு!

கடனை மிரட்டி கட்டாயமாக வசூலிப்பது, குடும்பத்தினரை பின் தொடர்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழகத்தில் தற்போது தனிநபர் கடன், கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்ட், வீட்டுக் கடன், வாகன கடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றை வசூலிப்பதில் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகிறது. குறிப்பாக குழு லோன் எனப்படும் வங்கிகளில் மற்றும் வங்கிகள் அல்லாத சிறு நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் பெறுவதும் அவற்றை மிரட்டி வசூல் செய்வதும் அரங்கேறி வருகிறது. மரியாதை குறைவாக பேசுவது, தாக்குவது, வீட்டின் முன் அமர்வது உள்ளிட்ட செயல்களில் கடன் வசூலிப்பாளர்கள் ஈடுபடுவதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் தனிநபர் கடன், தனி நபர்கள் குழு, சுய உதவி குழுக்கள் உள்ளிட்டவற்றில் கடன் பெறுபவர்களை வெளி ஆட்களை வைத்து வலுக்கட்டாய வசூலிப்பு நடைமுறைகளில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் அடுத்தடுத்து புகார் அளித்தனர்.

இந்நிலையில், வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு தலைமையில் சபை கூடிய நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த சட்டத் திருத்தத்தின் படி, “தனிநபர்கள், தனி நபர்கள் குழு, சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இந்த சட்டத் திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம். கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வலுக்கட்டாய நடவடிக்கைகளால் கடன் பெறுபவர் அல்லது அவரது உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள். இச்சட்ட முன் வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளி வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனை வசூலிக்க முறையற்ற வழியை நாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டதாகக் கூறியுள்ளார்.