செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி!

உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

ஒருவேளை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்துவிடுவாரோ என்றும், ஒருவேளை அவர் ராஜிநாமா செய்துவிட்டால், இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா மீது ஏப். 29ஆம் தேதி விவாதம் நடைபெற்றால், செந்தில் பாலாஜியால் பதிலளிக்க முடியாது என்பதால்தான், மாற்று ஏற்பாடாக, இன்று அமைச்சர் ரகுபதி, மசோதாவை தாக்கல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும் மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார். ஆனால் முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி மசோதாவை தாக்கல் செய்வார் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்திருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது.

அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. இதனை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மெரிட் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை, விசாரணையில், அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது. ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என முடிவு செய்து வரும் ஏப்.28-க்குள் தெரிவிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தது.