ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கூறியதாவது:-
சமீபத்தில் பகல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் விளையாட்டுக்கான மற்றொரு உதாரணமாகும். இது ஒரு முடிவுக்கு வரவேணடும். எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டின் இந்தியாவின் ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் உறுதியான பதிலடியால் நிரூபிக்கப்பட்ட படி, எந்தவொரு தவறான சாகசத்துக்கும் எதிராக தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.
சர்வதேச விசாரணையாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜ் முகம்மது ஆசிஃப் கூறியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பகல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் உட்பட கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதேபோல் அட்டாரி எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடியது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுக்காப்பைக் குறைத்தது போன்றவை அடங்கும். இதனிடையே அட்டாரி சோதனைச் சாவடி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியார்கள் மே 1ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பிகாரில் நடந்த விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில், “கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். பகல்காம் தாக்குதலில் மகனை, சகோதரனை, வாழ்க்கைத் துணையை இழந்து பலர் தவிக்கின்றனர். இந்தியாவின் ஆன்மா மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
தாக்குதலை நடத்தியபயங்கரவாதிகள், சதித் திட்டம் தீட்டியவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதத்தை வேரறுக்கும் காலம் வந்துவிட்டது. 140 கோடி இந்தியர்களின் மனவலிமையை யாராலும் உடைக்க முடியாது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை தேடிக்கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். எந்தவொரு பயங்கரவாதியும் தப்ப முடியாது. பூமியின் கடைசிவரை அவர்களை துரத்துவோம். தீவிரவாதிகளிடம் மீதமிருக்கும் நிலத்தையும் அழிக்கும் நேரம் வந்துவிட்டது. நீதி நிலைநாட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.