“பாகிஸ்தான் நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே. அந்நாட்டுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை ஆதீன மடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மதுரை ஆதீனம் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாட்டுடன் உலக நாடுகள் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான், அதனை தூண்டி விடுவது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இதனால் பாகிஸ்தான் இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை.
நேரு காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நல்லவராக இருப்பதை விட வல்லவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நம்பர் ஒன்னாக உள்ளார்.
இந்தியா எப்போதும் சமாதானத்தை தான் விரும்புகிறது. ஆனால் துங்கும் புலியை தூண்டிவிட்டால் ஏற்படும் பின்விளைவுகளை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும். உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. பாகிஸ்தானில் தான் தீவிரவாதிகள் வளர்க்கப்படுகின்றனர்.
தீவிரவாதத்துக்கு எதிராக நதி நீரை நிறுத்துவது சரியான நடவடிக்கை தான். அவர்களுக்கு காற்று கூட வழங்கக்கூடாது. மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் வழங்குவது சரியானது தான். ஆனால் பாகிஸ்தான் நாட்டினருக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லை. இந்தியர்களை சுட்டு வீழ்த்துகின்றனர். வாஜ்பாய் ஆட்சியின் போது கொடுக்கப்பட்டது போல், இந்த முறை பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும்.
இன்றைய தலைமுறையினர் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளனர். செல்போனில் நல்ல கருத்துக்கள் ஏராளம் கிடைக்கிறது. அதை பயன்படுத்துவதில்லை. சினிமா மோகம் காரணமாக கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சுதந்திர போராட்ட தியாகி சவார்கர் குறித்து ராகுல்காந்தி தவறாக பேசியிருக்கக்கூடாது. ராகுலுக்கு வயது போதாது. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.