அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தது சரியல்ல: மல்லிகார்ஜுன கார்கே!

“நாட்டின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது நீங்கள் பிகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். காஷ்மீரில் 26 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவதிக்க நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்ததாக கார்கே இவ்வாறு விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் பெருமை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) பிகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது நாட்டிக்கு மிகவும் துரதிருஷ்டமானது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், பிரதமர் மோடி அதில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். பிரதமர் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்து நாட்டின் திட்டம் என்ன என்பதை விளக்கியிருக்க வேண்டும். அவர் எங்களிடமிருந்து என்ன வகையான உதவியை எதிர்பார்க்கிறார்?.

பிரதமர் மோடி நாட்டுக்கு பணவீக்கத்தையும் வேலையில்லா திண்டாட்டத்தையுமே தந்தார். இத்தகையவர்கள் நாட்டைப் பலவீனப்படுத்துகிறார்கள். அவரின் 56 இஞ்ச் மார்பு சுருங்கிவிட்டது. 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வளர்ச்சியின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தை குஜராத்தாக மாற்ற 56 இஞ்ச் மார்புகள் தேவை என்று தெரிவித்திருந்தார்.

நாடே அனைத்தையும் விட உயர்ந்தது, பின்பு வருபவைதான் கட்சி, மதம் எல்லாம். நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். நமது நாட்டில் அரசியலமைப்பு தான் எல்லாவற்றுக்கும் மேலானது. நமது ஜனநாயகம் அரசியலமைப்பின் கீழ்தான் இயங்குகிறது. காங்கிரஸ் ஒற்றுமையை பற்றி பேசுகிறது. பாஜக அதை உடைப்பதைப் பற்றிப் பேசுகிறது.

அரசு புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையும் போதெல்லாம், அவர்கள் அதனை ஒடுக்கப்பார்ப்பார்கள். நாம் ஒடுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை. பாஜகவினர் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு எதிராக பொய்யான வழக்குகளை பதிந்து ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.