தேமுதிக இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்தார் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி. அண்மையில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர், தேமுதிக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி பிரேமலதாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிச்சந்தையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தொடர்கிறார். தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை விஜய பிரபாகருக்கு அணிவித்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.
இந்நிலையில், தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி, பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கடிதம் எழுதி உள்ளார். தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார். கு.நல்லதம்பி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
தேமுதிக பொதுச் செயலாளர் அவர்களுக்கு ஒரு தொண்டனின் கடிதம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டிருக்கும் எங்களின் குடும்பத் தலைவர் கேப்டன் அவர்களை வணங்கி தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் மக்கள் தலைவி அண்ணியார் அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதிக் கொள்வது. கு.நல்லதம்பி, கழகத்தின் உண்மை விசுவாசி ஆகிய நான் கழகத் தலைவர் அன்புத் தலைவர் கேப்டனால் உருவாக்கப்பட்டவன். நான் என்றென்றும் அன்புத் தலைவர் கேப்டன் அவர்களுக்காகவும் கேப்டன் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் என்றும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மன்றத்திலும் கழகத்திலும் என்னால் முடித்தவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில் தங்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இயக்கத்திற்காகவும் கேப்டனின் குடும்பத்திற்காகவும் என்னால் முடிந்த வரை செயல்பட்டு வருகிறேன். மேலும் தருமபுரியில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த தெய்வத்திரு கேப்டன் அவர்களின் மறு உருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற அன்புத்தம்பி இளைய கேப்டன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு கழக இளைஞரணி செய்லாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல் தமிழக சட்டப் பேரவையில் கழகத் தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.
எனவே எங்களின் காவல் தெய்வம் அண்ணி பிரேமலதா அவர்களின் கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்திலிருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை. என்றைக்கும் நான் கழகத்தின் கடைகோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொண்டு கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி அண்ணியார் அவர்களுக்கும் கழக பொருளாளர் தளபதி அண்ணன் எல்.கே. சுதீஷ் அவர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே கழக பொதுச் செயலாளர் திருமதி அண்ணியார், கடந்த 30.04.2025 அன்று வெளியிட்ட கழக அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.