மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் முதல்-அமைச்சர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி தமிழ்நாடு. தீவிரவாதத்திற்கு எப்போது முதலமைச்சர் துணை போக மாட்டார். தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவார். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் சிலர் விஷம கருத்துக்களை விதைக்க முற்படுகிறார்கள். அதற்கு துளியும் தமிழ்நாடு இடம் தராது.
இங்கு இஸ்லாமியர்களும், இந்துக்களும் சகோதர சகோதரிகளாக உள்ளனர். மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைக்கிறார். ஆனால் அவருக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் தமிழ்நாட்டில் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.