பகல்காம் தாக்குதலை பயங்கரவாதம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை? மதத்தின் பெயரால் கொலை செய்தவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும் என ஓவைசி தெரிவித்தார்.
காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இந்த நிலையில், பகல்காம் தாக்குதலை ‘பயங்கரவாதம்’ என்று வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை? என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பகல்காம் தாக்குதலை நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் கிளர்ச்சியாளர்கள், துப்பாக்கி ஏந்தியவர்கள் என்பது போன்ற வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்த முடியும்? அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து முஸ்லிம்கள் அல்லாதவர்களை மட்டும் சுட்டுக் கொன்றார்கள். மதத்தின் பெயரால் அவர்கள் கொலை செய்கிறார்கள், அவர்கள் பயங்கரவாதிகள்தான். மேற்கத்திய ஊடகங்கள் தங்கள் நாட்டில் ஏதாவது நடந்தால், அதை பயங்கரவாத தாக்குதல் என்று அழைக்கிறார்கள், அப்படியானால் பகல்காம் தாக்குதலை ‘பயங்கரவாதம்’ என்று ஏன் அவர்கள் கூறுவதில்லை?”
இந்தியாவில் 23 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதையும், இருநாடு கோட்பாட்டை எங்களின் முன்னோர்கள் ஏற்க மறுத்ததையும் பாகிஸ்தான் மறந்து விடுகிறது. ஜின்னா முன்மொழிந்த இருநாடு கோரிக்கையை நாங்கள் வெறுக்கிறோம். இந்தியாவை எங்களின் நாடாக ஏற்றுக்கொள்கிறோம். தொடர்ந்து இங்கேயே இருப்போம் பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் இந்தியாவை பிரிக்க விரும்புகிறது. இந்திய முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் இங்குள்ள பிற சமூகங்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்த விரும்புகிறது.
இருநாடு கோட்பாட்டை உண்மையில் நம்பினால் பாகிஸ்தான் ஏன் ஆப்கானிஸ்தான் எல்லை, ஈரான் எல்லைகளில் குண்டுகளை வீசி பலூச் மக்களை கொள்கிறது. ஆப்கானியர்கள் முஸ்லிம்கள், ஈரானியர்கள் முஸ்லிம்கள், பலூச்சிகள் முஸ்லிம்களாகவும், பாகிஸ்தானை சொந்த நாடாகவும் உள்ளனர். எனவே பாகிஸ்தான் அனைத்து பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்க இஸ்லாமை ஒரு மூகமூடியாக பயன்படுத்துகிறது. இதை தான் கடந்த 75 ஆண்டுகளாக அவர்கள் இந்தியாவுக்கு எதிராக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.