100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 மூதாட்டிகள் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மரக்கிளை விழுந்ததில், மூதாட்டிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.

செய்யாறு அடுத்த கழணிப்பாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் அருகில் நேற்று பணியில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கத்தால் குளத்தருகே இருந்த ஆலமரத்தின் நிழலில் அவர்கள் ஓய்வெடுத்தனர். திடீரென ஆலமரத்தின் பெரிய கிளை முறிந்து, மரத்தடியில் அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தது. இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த அன்னபூரணி (75) மற்றும் வேண்டா (65) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பச்சையம்மாள், கனகா, தேவி, சம்பூர்ணம், பாஞ்சாலை ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த செய்யாறு போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கிரேன் உதவியுடன் ஆலமரத்தின் கிளையை அகற்றி, இடிபாடுகளில் சிக்கியிருந்த அன்னபூரணி, வேண்டா ஆகியோர் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், காயமடைந்த பச்சையம்மாள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சம்பூர்ணம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பச்சையம்மாள் (60) வழியிலேயே உயிரிழந்தார்.