பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற மத்​திய அரசு கெடு!

பாகிஸ்​தான் நாட்டு தூதரக அதி​காரி ஒரு​வரை அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் நாட்டை விட்டு வெளி​யேறு​மாறு மத்​திய அரசு கெடு விதித்​துள்​ளது.

ஜம்​மு-​காஷ்மீரின் பகல்​காமில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 26 அப்​பாவி இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவப் படைகள் பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தின. இதைத் தொடர்ந்து இந்​தியா மீது பல இடங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் தாக்​குதலை நடத்​தி​யது. இதற்​குப் பதிலடி தரும்​வித​மாக இந்​திய பாது​காப்​புப் படை​யும் தாக்​குதலைத் தொடர்ந்​தது. 4 நாட்​கள் நடந்த போருக்​குப் பின்​னர் போரை நிறுத்​து​வதற்கு 2 நாடு​களும் ஒப்​புக்​கொண்​டன.

இந்​நிலை​யில் டெல்​லி​யில் உள்ள பாகிஸ்​தான் தூதரகத்​தில் அதி​காரி ஒரு​வர் மீது புகார் எழுந்​துள்​ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​களுக்கு இடையே நடந்த போரின்​போது, அந்த அதி​காரி தான் பணி​யாற்றி வரும் பணிக்கு முரணான வகை​யில் செயல்​பட்டு வந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது. இதையடுத்து அந்த அதி​காரியை அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் நாட்டை விட்டு வெளி​யேறு​மாறு மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் கெடு
விதித்​துள்​ளது. இதுதொடர்​பான உத்​தரவு பாகிஸ்​தான் தூதரக அலு​வல​கத்​துக்கு அனுப்​பப்​பட்​டு உள்​ளது. மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்​டுள்​ளது. அந்த அதி​காரி யார் என்ற விவரங்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை.