நாளை(மே 16) பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் நாளை காலை 10 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் கூட்டணி முடிவு, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மாவட்டச் செயலாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள் என அனைவரும் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் மோதல் நிலவி வந்த நிலையில் தற்போது அது தணிந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாமகவின் ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ கடந்த மே 11- ம் தேதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.