மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து வருமே மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளுடன் தொடர்ந்து மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், வரும் மே 29, 30 தேதிகளில் கட்சி ரீதியிலான மாவட்ட வாரியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, வரும் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சி அமைப்பு ரீதியிலான மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. மாலை 3.30 மணிக்கு ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கடலூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

மேலும், 30-ம் தேதி காலை 9.30 மணிக்கு, திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை , தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட செயலாளர்களுடனும், மாலை 3.30 மணிக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட செயலாளர்களுடனும் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.