தென் மாவட்ட குண்டர் சட்ட கைதிகளுக்காக மதுரையில் அறிவுரை குழுமம்!

உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை அடுத்து மதுரையில் தென் மாவட்ட குண்டர் சட்ட கைதிகளுக் கான அறிவுரைக் குழுமம் ஆக.1 முதல் செயல்பட உள்ளது.

நாட்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மொத்த குண்டர் சட்ட கைதுகளில் தமிழகத்தின் பங்கு 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 2,500 பேர் வரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். குண்டர் சட்டத்தில் கைதாகும் நபரை 90 நாட்கள் வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்படும். தடுப்புக் காவல் பிறப்பிக்கப்பட்டு 30 முதல் 40 நாட்களில் சம்பந்தப்பட்ட நபரை அறிவுரைக் குழுமம் முன் போலீஸார் ஆஜர்படுத்துவது வழக்கம். அப்போது மாநில அறிவுரைக் குழுமம் முன், கைதான நபரின் உறவினர்கள் ஆஜராகி குண்டர் சட்ட கைது தவறுக்கான காரணங்களைத் தெரிவிக்கலாம். விசாரணக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபரின் குண்டர் தடுப்புக் காவலை ஓராண்டுக்கு நீட்டிக்கலாம் அல்லது விடுவிக்க உத்தரவிடலாம்.

மாநில அறிவுரைக் குழுமம் சென்னையில் மட்டுமே உள்ளதால் அவர்களை ஆஜர்படுத்த ஒரு நாளுக்கு முன்பே அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பின்னர் அறிவுரைக் குழுமம் முன் ஆஜர்படுத்தி திரும்ப அழைத்து வருகின்றனர். இதனால் ஏற்படும் சிரமங்களை குறிப்பிட்டு மதுரையிலும் மாநில அறிவுரைக் குழுமம் அமைக்க வேண்டும் என கணேஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற அமர்வில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மதுரையில் அறிவுரைக் குழுமம் அமைக்க வேண்டும் என 2023 டிசம்பரில் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. இதை அமல்படுத்தாத நிலையில் உயர் நீதிமன்ற மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த போது அரசுத் தரப்பில் மதுரையில் அறிவுரை குழுமம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறி அவகாசம் கோரப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவின் பேரில் மதுரையில் அறிவுரைக் குழுமம் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுமத்தின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஆனந்தி ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுரை அறிவுரை குழுமம் ஆக.1 முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து குண்டர் சட்ட வழக்குகளை அதிகம் கையாளும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.அழகுமணி கூறியதாவது:-

குண்டர் சட்ட கைதிகளை சென்னைக்கு அழைத்துச் செல்வதில் கைதி மற்றும் பாதுகாப்புக்காகச் செல்லும் போலீஸார், கைதியின் உறவினர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். கால விரயம், பண விரயம் ஏற்படுவதுடன், கைதியின் பாதுகாப்பிலும் பிரச்சினை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே மதுரையில் அறிவுரை குழுமம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குக்காக நீதிமன்றம் 3 அமிகஸ் கியூரிகளை (நீதிமன்றத்துக்கு உதவுபவர்) நியமித்தது. அவர்களின் கருத்துகளைக் கேட்டு மதுரையில் அறிவுரை குழுமம் ஏன் அமைக்க வேண்டும் என விரிவான உத்தரவு பிறப்பித்தது. மதுரையில் அமையும் அறிவுரை குழுமம் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இதனால் உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைவர். இவ்வாறு அவர் கூறினார்.