மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது: உயர்நீதிமன்ற நீதிபதி!

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, Something wrong in the department of TASMAC என நீதிபதி புகழேந்தி குறிப்பிட்டதோடு, அரசு கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் உயிரிழப்புகளை தடுக்க மதுபான விற்பனையில் அரசே ஈடுபட்டுள்ளது எனவும், இந்த துறையில் ஊழல்களை அனுமதிக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தனர். அதில், மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளராக நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்று வரும் மாமூல் வசூல் குறித்து புகார் அளித்தோம், ஊடகங்களிலும் பேட்டி அளித்திருந்தோம். இது டாஸ்மாக் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் பேட்டியளித்த காரணமாக எங்கள் மீது பணியிடை நீக்கம் செய்து டாஸ்மார்க் மேலாளர் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவு சட்டவிரோதம் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர்கள் மதுரை மாவட்ட டாஸ்மாக்கில் பணிபுரிகின்றனர். மதுரை மாவட்ட டாஸ்மார்க் மேலாளராக பணியில் இருந்த ராஜேஸ்வரியும் திருமங்கலம் டாஸ்மார்க் மேற்பார்வையாளராக பணியில் இருந்த செல்வமும் இணைந்து ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தினமும் 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் புகார் அளித்தனர். புகாரில் நடவடிக்கை இல்லாததால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், மதுரை மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி ஊழியர் செல்வம் இணைந்து வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். இது குறித்தும் அவர்களின் உரையாடல்களையும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனுதாரர்கள் அனுப்பி உள்ளார்கள். இந்நிலையில் மனுதாரர் ஊடகங்களுக்கு சென்று பேட்டி அளித்துள்ளனர். இது டாஸ்மாக் விதிகளுக்கு எதிரானது என்றாலும், இதே நேரத்தில் மேலாளர் ராஜேஸ்வரி உடனடியாக அவர் பணி புரிந்த துறைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ நடக்கின்றது.

அரசு கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் உயிரிழப்புகளை தடுக்க மதுபான விற்பனையில் அரசே ஈடுபட்டுள்ளது இந்த துறையில் ஊழல்களை அனுமதிக்க கூடாது. ஊழல் குற்றச்சாட்டில் கிடைக்கக் கூடிய ஆவணங்களை பார்க்கும் போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. டாஸ்மாக் துறை தன் தவறுகளை உணர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர்கள் மீது டாஸ்மாக் நிறுவன விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க அனுமதி உள்ளது என்றும், மனுதாரர்கள் மீது ஏற்கனவே எடுத்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.