சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக் காலங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களைத் தவிர்த்துவிட்டு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை வாங்கி உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், விநாயகர் சதுர்த்தி போன்ற நாள்களில் விநாயகர் சிலைகள்கூட சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்” என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டுப் பொருள்களை விற்கமாட்டோம் என்று உள்ளூர் வியாபாரிகள் உறுதியேற்க வேண்டும்” என்றார்.
இந்திய சந்தைகளில் வெளிநாட்டுப் பொருள்கள் வெள்ளம் போல குவித்து கிடக்கின்றன எனக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “விழாக் காலங்களில் விநாயகர் சிலைகள்கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது துரதிருஷ்டவசமானது. சிறிய கண்களுடன் சரியாக கண்கள்கூட திறக்கப்படாமல் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு (சீனர்களின் சிறிய கண்களை ஒப்பிட்டு) இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஹோலிக்கு பயன்படுத்தப்படும் வண்ணப் பொடிகளும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
சீனாவிலிருந்து மிகவும் மலிவான விலையிலும் தரம் குறைந்து உருவாக்கப்படும் சிலைகள், பட்டாசுகள், வண்ண விளக்குகள், அலங்காரப் பொருள்கள், பொம்மைகள் ஆகியவை விழாக் காலங்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.
அதேபோல, உங்கள் வீடுகளில் எத்தனை வெளிநாட்டுப் பொருள் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். அதில் சீப்பு, ஹேர் பின் உள்ளிட்டவைகள் இருக்கும். இந்தியாவை காப்பாற்ற, உருவாக்க, வளரச் செய்ய ஆயுதப் படைகளின் ஆபரேஷன் சிந்தூர் மட்டும் போதாது. 140 கோடி மக்களின் பொறுப்பும் அவசியம்” என்றார் பிரதமர் மோடி.