நீதிமன்ற உத்தரவுகளை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு!

நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படாமல் அவமதிப்பு வழக்குகள் அதிகரித்து வருவதால் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தியாக உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றாமல் இருப்பதால் வழக்கு தொடர்ந்தவர்கள் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் சமீபகாலத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கலாகி வருகின்றன. குறிப்பாக கல்வித் துறை, போக்குவரத்து துறைகளில் அதிகளவில் அவமதிப்பு வழக்குகள் தாக்கலாகின்றன. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவமதிப்பு வழக்குகளில் கல்வித் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குறையவில்லை. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் விசாரணைக்கு வரும்போது அரசின் மீது நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். சமீபத்தில் உச்ச நீதிமன்றமும், நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது, தாமதமாக மேல்முறையீடு செய்வது, நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் அதிகளவில் தாக்கலாவது தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசின் நடவடிக்கை தொடர்பாக நீதிபதிகள் அடிக்கடி அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதால் நீதிமன்ற உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தையடுத்து நீதிமன்றங்களில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாவதை தடுக்க நீதிமன்ற உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், அனைத்து துறைகளும் நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட முடியாத அளவில் இருந்தால் அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து தடையாணை பெற சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அரசு வழக்கறிஞர்களுடன் இணைந்து செயல்படவும் தனி நடைமுறையை உருவாக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அதனால் ஏற்படும் நிதி இழப்புகளுக்கு யார் காரணம் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அரசு உத்தரவில் குறிபிடப்பட்டுள்ளது.