1947ம் ஆண்டிலேயே தீவிரவாதிகளை அழித்திருக்கணும்: பிரதமர் மோடி!

காஷ்மீரில் தீவிரவாதம் குறித்தும் பாகிஸ்தான் நடத்தும் பினாமி போர் குறித்தும் பிரதரமர் மோடி சில காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார். காஷ்மீர் தீவிரவாத்தை 1947ம் ஆண்டிலேயே ஒழித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு பைசரன் பள்ளத்தாக்கின் அழகை சுற்றி பார்த்த பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் சிலர் சரமாரி தாக்குதல் நடத்தினர். அதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா பாகிஸ்தான் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்று, மீண்டும் அடி வாங்கியதெல்லாம் தனிக்கதை. இந்த மாதம் 2வது வாரத்தில் தான் இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே காஷ்மீர் தீவிரவாதம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலேயே காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் திறம்பட கையாண்டிருக்க வேண்டும் என தெரிவித்தார். பிரிவினைக்கு பிறகே நாட்டில் முதல் பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக தெரிவித்த அவர், இன்று வரை பல தலைமுறைகளை கடந்த பிறகும் நாம் அதன் தொடர்ச்சியுடன் போராடி கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

1947ம் ஆண்டிலேயே பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்திய போதிலும், அப்போதைய காங்கிரஸ் அரசு அந்த ஆலோசனையை புறக்கணித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, “1947ல் இந்தியா பிரிக்கப்பட்டபோது.. அன்றிரவே, காஷ்மீர் மண்ணில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தான் முஜாஹிதீன் என்ற பெயரில் இந்தியாவின் ஒரு பகுதியை வலுக்கட்டாயமாக கைப்பற்றியது. அப்போதே முஜாஹிதீன்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் மீட்கும் வரை ராணுவ தாக்குதலை நிறுத்தக்கூடாது என அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அறிவுறுத்தினார். ஆனால் அவரது வார்த்தைகளை அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஆரம்பித்த இந்த முஜாஹிதீன்களின் ரத்தக்களரி 75 ஆண்டுகளாகத் தொடர்கிறது. பகல்காமில் நடந்தது அதன் ஒரு சிதைந்த வடிவம் மட்டுமே. இந்திய இராணுவம் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. இந்தியாவிடம் வெற்றி பெற முடியாது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொண்டது” என்றார்.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரித்து வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், “இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் என்பது பினாமி போர் அல்ல. அவை பாகிஸ்தானால் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். அதுதான் அவர்களின் போர் உத்தி. எல்லை தாண்டிய தீவிரவாதம் மூலம் போரை நடத்துகிறது பாகிஸ்தான்” என்று கடுமையாக விமர்சித்தார்.