அரசுப் பள்ளி ஆசிரியை தாக்கியதில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் பள்ளி கழிப்பறைக்குச் சென்றபோது கதவு மூடப்படாமல் இருந்ததை பார்த்த 6-ம் வகுப்பு மாணவிகள், கழிப்பறைக் கதவை மூடிஉள்ளனர். சிறிது நேரம் கழித்து கதவை திறந்து விட்ட மாணவிகளை ஆசிரியை சாந்தி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சக மாணவிகள் முன்பாக அடித்துள்ளார். இதில் மாணவிகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்டக் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஆறுமுகம் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரியை, சின்னசேலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
கல்வி அதிகாரி அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மாணவிகளை ஆசிரியை சாந்தி தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் ஒரு மாதத்துக்குள் தலா ரூ.2 லட்சம் வீதம் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். மாணவிகளை தாக்கிய சின்ன சேலம் மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளார்.