இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் உள்நாட்டில் தங்களுடைய முதலீடுகளை நிறுத்திவிட்டு வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் உள்நாட்டில் தங்களுடைய முதலீட்டு திட்டங்களை ரத்து செய்து வருகின்றன என குறிப்பிட்டு இருக்கிறார். 2024 – 25 ஆம் ஆண்டு இதுபோல இந்திய நிறுவனங்கள் தங்களுடைய அறிவிக்கப்பட்ட திட்டங்களை திடீரென ரத்து செய்யப்படும் விகிதம் என்பது 35.9% உயர்ந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். அதே வேளையில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களுடைய முதலீடுகளை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன என்பதையும் ப. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் பதிவின் மூலம் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ப. சிதம்பரம் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தியா பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டு மையமாக மாறி வருகிறது என மத்திய அரசு தொடர்ந்து கூறி வரக்கூடிய சூழலில் ப. சிதம்பரம் இப்படி ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அண்மையில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது. ப. சிதம்பரத்தின் இந்த பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் அதில் இடம்பெற்ற தரவுகள் இருக்கின்றன. 2024– 25 ஆம் நிதி ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு வெகுவாக குறைந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் தொழில் புரியக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு அதிக பணத்தை திருப்பி அனுப்பி இருக்கின்றன. அதேபோல இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிக அளவு முதலீடு செய்திருக்கின்றன.
21 ஆம் ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு 44 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு 28 பில்லியன் டாலர்களாக இருந்து 2024-25ஆம் நிதியாண்டில் 353 மில்லியன் டாலர்கள் என குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல இந்தியாவிற்கு வந்த அந்நிய நேரடி முதலீடுகளில் 60 சதவீதம் சிங்கப்பூர், மொரிசியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தான் வந்தடைந்து இருக்கின்றன. அதே போல இந்தியாவில் இருந்து வெளியேற சென்ற முதலீடுகளும் சிங்கப்பூர், அமெரிக்கா, மொரிசியஸ் மற்றும் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு தான் அதிகம் சென்றிருக்கின்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களில் தாங்கள் செய்திருந்த முதலீடுகளில் 16 சதவீதம் தொகையை திரும்ப பெற்றுள்ளனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்யும் போக்கு 75 சதவீதம் உயர்ந்து 21 பில்லியன் டாலர்கள் என உயர்ந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.