மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார்.
மேற்குவங்கத்தின் அலிப்பூர்துவாரில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அலிப்பூர்துவார் மற்றும் கூச்பெஹார் மாவட்டங்களில் ரூ.1,010 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-
அண்மையில் மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத், மால்டாவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அப்பகுதி பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. அவர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. திரிணமூல் காங்கிரஸ் கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் வேலையிழந்து உள்ளனர். மாநிலத்தின் கல்வித் துறை முழுமையாக சீர்குலைந்திருக்கிறது.
சட்டம், ஒழுங்கு சீர்குலைவு: மேற்குவங்கத்தில் பல்வேறு பிரச்சினைகள் பூதாகரமாகி வருகின்றன. குறிப்பாக மாநிலம் முழுவதும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன. வேலைவாய்ப்பின்மை பிரச்சினையால் இளைஞர்கள் பரிதவிக்கின்றனர். அரசு நிர்வாகம் சீர்குலைந்து அனைத்து துறைகளிலும்ஊழல் வியாபித்து பரவி உள்ளது. ஏழைகளின் உரிமைகள், சொத்துகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நமது சகோதரிகளின் குங்குமம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் மூலம் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதன்பிறகு நடைபெற்ற போரில் பாகிஸ்தானின் விமான படைத் தளங்கள் அழிக்கப்பட்டன. குங்குமத்தின் வலிமை குறித்து நமது ராணுவம் வீரர்கள் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பித்து உள்ளனர். இந்தியாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்க நேரிடும். ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
சிக்கிம் மாநிலம் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தலைநகர் காங்டாக்கில், ‘சிக்கிம் 50’ என்ற நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நாம்சி பகுதியில் ரூ.750 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
விழாவில் அவர் பேசும்போது, “சிக்கிம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இயற்கை வேளாண்மையின் மையமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது. மாநிலத்தின் சுற்றுலா துறை அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு விளையாட்டு வீரர்கள் வடகிழக்கை சேர்ந்தவர்கள் என்பது பெருமிதம் அளிக்கிறது’’ என்றார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு சென்றார். அங்கு பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையத்தை அவர் திறந்து வைத்தார்.