மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுகவினர் கூறும்போது, “பொன்வசந்தின் கட்சிப் பணியால் ஈர்க்கப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரிந்துரையில் இந்திராணி மேயரானார். தற்போது மாநகராட்சி நிர்வாகத்தில் தலையீடு, கட்சி செயல்பாடுகளில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பொன்வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது மனைவி இந்திராணி, மேயர் பதவியில் வழக்கம்போல செயல்பட முடியாத சூழல் உள்ளது. மேயர் பதவி குறித்து திமுக என்ன நிலைப்பாட்டை எடுக்க உள்ளது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். அதுவரை பொன்வசந்த் கட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடவே முடியாது. அவரது நீக்கம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது’’ என்றனர்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பொன் வசந்த், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பிடிஆர். பழனிவேல் ராஜனின் தீவிர விசுவாசி. அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்தார். திமுக ஆட்சி அமைந்தபோது பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராகவும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளராகவும் கட்சி, ஆட்சி இரண்டிலுமே செல்வாக்குடன் இருந்து வந்தார்.
அவர் ‘கை’ காட்டும் நபர் மதுரை மேயராக வரக்கூடிய நிலை இருந்ததால், தனது ஆதரவாளர் பொன்வசந்த் மனைவி இந்திராணியை மேயராக்கினார். அதற்கு முன்பு வரை, இந்திராணிக்கு அரசியல் அனுபவமே இல்லை. மேயராக அவர் பொறுப்பேற்றபோது, இந்தக் கேள்வியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பழனிவேல் தியாகராஜன், `ஐஏஎஸ் அதிகாரிகள் அவருக்கு வழிகாட்டுவார்கள், போகப்போக எல்லாம் சரியாகி விடும்’ என்று நம்பிக்கை அளித்தார்.
இந்திராணி மேயரான நாள் முதல் தற்போது வரை, பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்களுடன் ஒத்துப்போகவில்லை. மேயர் இந்திராணி பெயரளவுக்கு மேயராகவும், நிழல் மேயராக அவரது கணவர் பொன் வசந்த் செயல்பட்டு வருவதாகவும், மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் தலையிடுவதுடன், அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால், மாநகராட்சி ஆணையர்களாக வந்தவர்கள் சிறிதுகாலம்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சென்றனர். அதனால், இந்திராணி மேயராகி 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் 5 ஆணையர்கள் மாற்றப்பட்டநிலையில் தற்போது 6-வது ஆணையராக சித்ரா வந்துள்ளார். இந்நிலையில்தான் பொன் வசந்த் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.