தேர்​தல் பணிகளை இப்போதே தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்!

‘சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டியிட விரும்பும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்’ என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி உறுதியாகவும், ஒருங்கிணைந்தும் செயல்பட்டு வருகிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளுடன் தொடர்ந்து மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தேர்தல், கட்சிப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற கூட்டத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சி அமைப்பு ரீதியிலான மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், மாலையில் ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கடலூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். இவ்விரு கூட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

வாக்குச்சாவடி பாக கிளை அளவில், ஒவ்வொரு பாகத்திலும் 3 மகளிர் உள்பட 9 பேரை நியமிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதில் சில மாவட்டங்களில் அலட்சியம் நிலவுகிறது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும், இதில் சிறப்பு கவனம் செலுத்தி பொறுப்பாளர்களைச் சேர்த்து முடிக்க வேண்டும். வாக்குச்சாவடி பாக கிளையை வலுப்படுத்தி விட்டால் 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். தகுதியான, மக்கள் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் கண்டு, கட்சி தலைமை கேட்கும்போது, உடனே வழங்கும் வகையில் பட்டியல் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். போட்டியிட விரும்பும் மாவட்டச் செயலாளர்கள், அவர்கள் விரும்பும் தொகுதிகளில் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்.

கட்சி ரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராட்டங்களை தீவிரப்படுத்தி, திமுக அரசின் அவலங்களை, மக்களுக்கு தெரியப்படுத்தி, மக்கள் பாதுகாப்பாக வாழ, 2026 தேர்தலில் அதிமுக அரசு அமைய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆலோசனைக் கூட்டம் இன்றும் நடைபெறுகிறது. காலையில், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர்களும், மாலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.