தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கி.மீ. தொலைவுக்கு `ரோடு ஷோ’ செல்கிறார். நாளை திமுக பொதுக் குழுவில் பங்கேற்கிறார். இதையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதியம் 12 மணியளவில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, எம்.மணிமாறன் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர்.
தனியார் ஹோட்டலில் சிறிது தூரம் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், மாலை 5 மணியளவில் பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பெருங்குடி, வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவாநகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை சாலையோரம் திரண்டிருக்கும் பொதுமக்கள், கட்சியினரை திறந்த வேனில் நின்றபடி முதல்வர் சந்திக்கிறார்.
இதையொட்டி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முதல்வர் வேனை விட்டு இறங்கி, சாலையில் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். மேலும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரோடு ஷோவுக்குப் பிறகு மதுரா கோட்ஸ் பாலம் அருகே புதிப்பிக்கப்பட்ட முன்னாள் மேயர் முத்துவின் சிலையை முதல்வர் திறந்துவைக்கிறார். இரவில் அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
நாளை காலை 9 மணிக்கு உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார். வழிநெடுகிலும் திமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர். முதல்வரின் மதுரை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். பொதுக்குழு, ரோடு ஷோ நடக்கும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று முதலே திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் குவியத் தொடங்கியுள்ளனர். திமுக கொடி, தோரணங்கள், வரவேற்பு போஸ்டர்கள் என மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.