வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழையும், அசாமில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் என வடகிழக்கு மாநிலங்கள் பலத்த மழை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அசாமின் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, தலைநகர் குவாஹாட்டி உட்பட பல பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

காம்ரூப், காம்ரூப் மெட்ரோ, சச்சார் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஐந்து வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 10,000-க்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் மட்டும் குழந்தைகள் உள்பட 5 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். குவாஹாட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில், மாநில பேரிடர் மேலாண்மை வாரியம், கனமழையும் அதனால் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு, மரம் முறிந்து விழுதல் போன்ற பாதிப்புகள் தொடரும் என்று எச்சரித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு மாவட்டங்களிலும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “மேல் சுபான்சிரியில், சிகினி நதி பெருக்கெடுத்து ஓடியதால், மாவட்டத் தலைநகர் தபோர்ஜியோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மாவட்டத்தில் 117 வீடுகள் உட்பட பல உள்கட்டமைப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.” என்று தெரிவித்தனர்.

நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பாதிக்கப்பட்டக்கூடிய இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், “மேற்கு கமெங் மாவட்டத்தில் பலிபாரா – சாரிதுர் – தவாங் சாலையில், ஜமிரிக்கு அருகிலுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித்தவிக்கின்றனர்.” என்றார். மாவட்டத்தில், ஜியோதி நகர், திராங், பத்மா மற்றும் துர்கா மந்திர் போன்ற இடங்களிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தின் தலைநகரான போம்டிலிவில் பேடாலிங் காலனியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடு ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும் நிலச்சரிவு மின் விநியோகத்தை தடைசெய்துள்ளது.

சிக்கிம்-க்கு ரெட் அலார்ட்: சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து வரும் கனமழை மற்றும் தீஸ்தா நதியின் நீர்மட்டம் தொடந்து அதிகரித்து வருவதால் வானிலை ஆய்வுமையம் அங்கு ரெட் அலார்ட் விடுத்துள்ளது. மேலும், மங்கான், கியால்ஷிங் மற்றும் சோரெங் மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மங்கானுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக, காங்டாக் மாவட்டத்தின் திக்சு முதல் சிங்டாம் வரையிலுள்ள தீஸ்தா நதிப்படுக்கை பகுதிகள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பாக வடக்கு சிக்கிமில் வெள்ளம் போன்ற பாதிப்புகளையும் உருவாக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே வடக்கு சிக்கிமில் உள்ள தீங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் நிலச்சரிவு பதிவாகியுள்ளன.கனமழை மற்றும் தொடர் மழை காரணமாக தீஸ்தா நதியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் இவ்வாறாக இருக்க, கேரளா – கர்நாடகா கடலோர மாவட்டங்களிலும் இன்று (மே.31) காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக அரசு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இன்று காலை முதல் பெய்துவரும் மழையால் கண்ணூர் பல்கலைக்கழகம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.