கேரள கடல் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்து: தமிழக முதல்வர் ஆய்வு!

கேரள கடற்கரையில் கப்பல் கவிழ்ந்துள்ள நியைலில், பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களும் மீனவர்களும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த மே 24-ம் தேதி கேரள மாநில கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா-3 என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் மூழ்கின.

வலுவடைந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் உட்பட பிற பொருட்கள் கேரள மாநிலத்தின் கடற்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீன்வளம் மற்றும் கடல்சார் உயிரினங்களுக்கு ஏதாவது பாதிப்பு குறித்தி ஆய்வு செய்யப்பட்டது. வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு பேசும்போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதனை திறம்பட எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம், தேசிய கடல் ஆராய்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்களுடன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மீன்வளத்துறை செயலர் என்.சுப்பையன் கூறும்போது, ‘‘கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மற்றும் தொடர்புடைய அனைத்து அரசு துறையினருக்கும் பிளாஸ்டிக் துகள்களை அப்புறப்படுத்துவதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பெட்டகங்கள் வானிலை சூழலுக்கேற்ப நகரும் திசை மற்றும் கரை ஒதுங்கக்கூடிய பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் துகள்களை பாதுகாப்பான முறையில் தன்னார்வலர்கள் மூலம் அகற்ற வேண்டும்.

காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகள் விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களும் மீனவர்களும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும்.

மேலும், இந்நிகழ்வால் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த குறுகிய மற்றும் நீண்டகால ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத் துறையானது மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தினை கண்டறிய ஆய்வினை துரிதப்படுத்த வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழக கடற்கரையில் ஒதுங்கவில்லை. சந்தேகத்துக்குரிய பொருட்கள் தென்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல் துறைக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சூழ்நிலையை தொடர்ந்து கவனமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் தலைமைச்செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.