மதுரை பந்தல்குடி கால்வாயை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

மதுரை பந்தல்குடி கால்வாய் பகுதியில் கழிவுநீர் சூழ்ந்து சுகாதாரமற்ற முறையில் இருந்த நிலையில், இன்று ஸ்டாலின் மதுரை வருகையையொட்டி அந்த கால்வாய் சுற்றிலும் துணி வைத்து மறைக்கப்பட்டிருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் முன்னாள் மேயர் முத்துவின் சிலையை திறந்து வைத்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் பந்தல்குடி கால்வாயை நேரில் பார்வையிட்டு, தூர் வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரை வந்தடைந்தார். மாலை மதுரையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். அவனியாபுரத்தில் இருந்து, ஜீவாநகர், ஜெயந்தி நகர் வழியாக சுமார் 25 கிமீ தூரத்துக்கு பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். சுமார் 3 மணி நேரம் அவர் ரோடு ஷோ மேற்கொண்டார். வழி நெடுகிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஸ்டாலின் மதுரை மெஜிரா கோட்ஸ் ஆலை முன் முன்னாள் மேயர் முத்துவின் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் பின்னர் தன் அண்ணன் மு.க அழகிரியை அவரது வீட்டில் சந்தித்து இரவு உணவு உண்டார். தொடர்ந்த் விடுதியில் தங்கிவிட்டு இன்று பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

முன்னதாக மதுரை மாநகர வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தல்குடி கால்வாய் வழியாக வந்தபோது அந்த கால்வாய் தெரியாமல் இருப்பதற்காக அதில் திரைச்சீலைகள் கட்டப்பட்டு மறைக்கபட்டு இருந்தது. மேலும் அதில் கட்சிக் கொடிகளும் கட்டப்பட்டு இருந்தன. இது காலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள் பலரும் இது குறித்து விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் முத்து சிலையை திறந்து வைத்த பிறகு பந்தல்குடி பகுதியில் இறங்கி சென்று முதல்வர் ஸ்டாலின் கால்வாயை நேரில் ஆய்வு செய்தார். மேலும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பந்தல்குடி வாய்க்கால், பீ.பீ. குளம் வாய்க்கால், அனுப்பானடி வாய்க்கால் ஆகியவற்றில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று (31.5.2025) பந்தல்குடி வாய்க்காலை ஆய்வு செய்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுச்சுவர்களை கட்டும் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். மாநகராட்சியின் சார்பில் தூர் வாரும் பணிகளுக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், நீர்வளத் துறையின் சார்பில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு 63 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகளை மேற்கொள்வதற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், விரைந்து அதற்கான அரசாணையை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம், திரு.கோ.தளபதி, மதுரை மாநகராட்சி மேயர் திருமதி இந்திராணி, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் திரு.சித்ரா விஜயன், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.