நீங்க சிந்து நதியை நிறுத்தினால்.. நாங்க பிரம்மபுத்ராவை நிறுத்துவோம்: சீனா!

பாகிஸ்தானுக்குப் போகும் நீரை இந்தியா நிறுத்தினால்.. இந்தியாவுக்குப் போகும் நீரைச் சீனாவும் நிறுத்தும் எனச் சீனாவின் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ் அடாவடி கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பகல்காமில் அப்பாவி மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு பைசரன் பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது இருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் உதவியிருக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆபரேஷன் சிந்தூரை நடத்திய இந்தியா, அதேபோல சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதனால் வரும் காலங்களில் சிந்து நதி நீர் பாகிஸ்தான் செல்வதில் சிக்கல் ஏற்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் சீனா இப்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் உள்ள சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ், இந்தியாவுக்குப் பிரம்ம புத்திரா நதியிலிருந்து தண்ணீர் வருவதைச் சீனா நிறுத்தக்கூடும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருந்த நிலையில், அதற்கு அதிருப்தி தெரிவித்த பிறகே விக்டர் இந்த கருத்துகளைக் கூறினார். தன்னை மற்றொரு நபர் எப்படி நடத்தக்கூடாது என ஒருவர் நினைக்கிறாரோ.. அதுபோல மற்றவர்களை நடத்தக் கூடாது என விக்டர் குறிப்பிட்டார். சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தான் தண்ணீர் செல்வதை இந்தியா தடுத்தால்.. சீனாவும் இந்தியாவுக்குத் தண்ணீர் செல்வதைத் தடுக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு பிரம்ம புத்திரா நதி முக்கியமானதாக இருக்கிறது. இது சீனாவில் இருந்தே இந்தியாவுக்கு பாய்கிறது. இந்த புரம்புத்ரா நீர் மீது சீனாவுக்கே அதிக கட்டுப்பாடு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் இருந்து எப்படி பாகிஸ்தானுக்கு ஆறுகள் போகிறதோ.. அதேபோல சீனாவில் இருந்தும் இந்தியாவுக்கு ஆறுகள் வருவதை யாரும் மறக்கக்கூடாது என்று குறிப்பிட்டார். மேலும், தனது நண்பனான பாகிஸ்தானை ஆதரிக்கச் சீனா பிரம்ம புத்திரா நதியின் நீரை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் என்றும் விக்டர் காவ் தெரிவித்துள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கார்கில் போர் நடந்தபோதும் கூட சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தவில்லை. கடந்த காலங்களிலும் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தானும் பாகிஸ்தானை ஆதரிக்கும் தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், அப்போது கூட சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்ததே இல்லை. ஆனால், இந்த முறை பகல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. அதுவும் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வரை மட்டுமே நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லாமல் சீன பிரதிநிதி இதுபோல பொறுப்பேற்ற கருத்துகளைக் கூறியிருப்பது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.