போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும்: ஆளுநர் ஆர்என் ரவி!

போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும், அதைப்பற்றி கவலைப்படக்கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலால், கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானினின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மீது இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் சேதம் அடைந்தன. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் மொத்தமாகச் சரணடைந்தது. தொடர்ந்து சண்டை நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையின் போது, இந்தியாவுக்கும் சில இழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. அதேநேரம் அது தொடர்பாக இந்திய ராணுவம் எந்தவொரு தகவலையும் கூறவில்லை. இந்த சூழலில்தான் சிங்கப்பூரில் இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைவிட, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதே கவனிக்க வேண்டியது என்று நான் நினைக்கிறேன்” என்றார். மேலும், இந்தியா பாதுகாப்புப் படையின் 6 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறிய வரும் நிலையில், அது முழுமையாகத் தவறான தகவல் என்பதை அனில் சவுகான் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில்தான், போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்விகள், சந்தேகங்களை எழுப்புகின்றனர். போர் என்றால் சில இழப்புகள் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றி கவலைப்படக்கூடாது” என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்.