தமிழக அரசின் சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற செம்மொழி நாள் நிகழ்ச்சியில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாள், தமிழக அரசு சார்பில் செம்மொழி நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் நேற்று செம்மொழி நாளாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று செம்மொழி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்மொழி உருவாக்கம், தொல்லியல் சான்றுகள், செம்மொழித் தகுதி, 1815 முதல் 1950-ம் ஆண்டு வரை வெளிவந்த செவ்வியல் நூல்கள், 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றால் வெளியிடப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் கருவூலம் மற்றும் ஒளிப்படங்கள் கொண்டு கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வரவேற்றார். `முத்தமிழறிஞரின் முத்தமிழ்’ என்ற தலைப்பில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ‘எல்லோர்க்கும் எல்லாமுமாய்’ என்ற தலைப்பில் கருணாநிதி குறித்த ஆவணப் படமும், செய்தித் துறையால் உருவாக்கப்பட்ட செம்மொழி நாள் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டன.

தொடர்ந்து, தாயம்மாள் அறவாணனுக்கு, இந்த ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காசோலை, கருணாநிதி சிலை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர், செம்மொழி நாளையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறையால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, கேடயங்களை முதல்வர் வழங்கினார்.

இதுதவிர, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகைக்கான ஒப்பளிப்பு அரசாணையை ம.சக்கரவர்த்தி, இரா.மோகனசுந்தரம், ப.பானுமதி (எ) ஆதிரா முல்லை, அ.இதயகீதம் இராமானுஜம், ந.சுந்தரி ஆகிய 5 பேருக்கு வழங்கினார். தொடர்ந்து, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வாயிலாக உருவாக்கப்பட்ட தமிழக அரசின் நான்காண்டு சாதனை மலரையும் முதல்வர் வெளியிட்டார். இந்த மலரை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர்மொய்தீன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த சாதனை மலரில், 2021 மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், முதல்வரின் காலை உணவு, மக்களைத் தேடி மருத்துவம், மக்களுடன் முதல்வர், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48 , இல்லம் தேடிக்கல்வி, ஊட்டச்சத்தை உறுதி செய், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், முதல்வர் மருந்தகம் போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் மூலம் தமிழகம் முன்னேற்றப் பாதையில் வளர்ச்சிடைந்துள்ளது குறித்து விளக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் துறை வாரியாகத் தொகுத்து, செய்தித் துறையின் கீழ் இயங்கும் ’தமிழரசு’ சார்பில் இந்த மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், திட்டங்கள் தவிர்த்து, பல்வேறு முக்கிய பிரமுகர்களின் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இராசேந்திரன் சங்கரவேலாயுதன் எழுதிய `தமிழ் வினையடிகள் – வரலாற்று மொழியியல் ஆய்வு’ மற்றும் பா.ரா.சுப்பிரமணியன் எழுதிய `சங்க இலக்கியச் சொல்வளம்’ ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டார். பின்னர், சுகி சிவம் தலைமையில் “செம்மொழியின் தனிச்சிறப்பு அதன் தொன்மையே! அதன் இளமையே!” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, செய்தித் துறைச் செயலர் வே.ராஜாராமன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கவிதா ராமு, செய்தித் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரு வாரத்துக்கு கண்காட்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே, வரும் 9-ம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிட்டுப் பயன்பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.