சென்னை ஐஐடிக்கு செல்லும் மாணவியின் கல்வி செலவை அதிமுக ஏற்கும்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை ஐஐடியில் இடம் கிடைத்து உள்ள கல்வராயன்மலையைச் சேர்ந்த பழங்குடி இன மாணவியின் கல்வி செலவினை அதிமுகவே ஏற்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:-

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி, 12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜேஇஇ தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, ஐஐடி மெட்ராசில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.

மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.

கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன். அவரது பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மாணவி ராஜேஸ்வரியின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், மாணவி ராஜேஸ்வரிக்கான படிப்பு செலவுகளை அதிமுக ஏற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் மறைந்த தந்தையின் கனவை தன் லட்சியமாகக் கொண்டு, விடாமுயற்சியின் மூலம் சென்னை ஐஐடியில் இடம்பிடித்திருக்கும் மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.