மதுரையில் திமுக நடத்திய பிரமாண்ட பொதுக்குழுவுக்கு போட்டியாக, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ம் தேதி நடத்த உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மதுரையில் கடந்த 1-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை மத்திய பாஜக அரசுக்கு எதிரானவையாகும். குறிப்பாக, மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம், உச்ச நீதிமன்றத்துடன் மோதும் பாஜக அரசுக்குக் கண்டனம், வஞ்சக பாஜகவையும், துரோக அதிமுகவையும் விரட்டியடித்து 2026-ல் திமுக ஆட்சி தொடர களப்பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் பொதுக்குழுவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, அதிமுக, பாஜகவை நேரடியாகவும், நடிகர் விஜய்யை மறைமுகமாகவும் விமர்சனம் செய்தார். மேலும், “மொத்த தமிழகத்தையும் பாஜக கன்ட்ரோலுக்கு கொண்டுசெல்ல பழனிசாமி துடிக்கிறார். இதற்காகத்தான் அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருகிறார். மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ‘ஷா’ வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மதக் கலவரம், சாதிக் கலவரத்தை தூண்டுவார்கள். மக்களை பிளவுபடுத்துவார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து மாநிலத்தின் தனித்துவத்தையே அழித்து விடுவார்கள்” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசினார்.
திமுக பொதுக்குழுவில் முதல்வரின் பேச்சு, குறிப்பாக அமித்ஷா குறித்து அவர் பேசியது பாஜகவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. எனவே, திமுக பொதுக்குழு கூட்டம் நடத்திய மதுரையிலேயே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, அமித்ஷாவை கொண்டே பதிலடி கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதையடுத்து, திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில், ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி அருகே சுற்றுச்சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் மைதானத்தில் வரும் 8-ம் தேதி மாலை 3 மணியளவில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். மேலும், தமிழகம் முழுவதும் இருந்து பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் தொடர்பாக, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலிருந்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாஜகவினர் கூறும்போது, “மத்திய அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். திமுக பொதுக்குழுவைவிட அமித்ஷா பங்கேற்கும் கூட்டம் பிரம்மாண்டமாக நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், பாஜக-அதிமுக கூட்டணிக்கான வெற்றி வியூகம் குறித்தும், வேட்பாளர் தேர்வு, தொகுதி தேர்வு மற்றும் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது குறித்தும் விவாதிக்கப்படும்” என்றனர்.