விஜய் நடத்தும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி குறித்த வேல்முருகனின் ஆபாச கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, தமிழகத்தில் திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சட்டம்-ஒழுங்கு மோசம், போதைப் பொருள் புழக்கம், மருத்துவமனைகளில் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பாதிப்பால் நடத்தப்படவில்லை என்றும், 2027 மார்ச்சில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார். தமிழகத்தில் இடங்களை குறைப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுவது வெறும் புரளி என்று அவர் விமர்சித்தார்.
தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படவில்லை என்று தமிழிசை குற்றம்சாட்டினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமரை வரவேற்கிறார், ரயில்வே அமைச்சரிடம் திட்டங்களை கேட்கிறார். ஆனால் ஸ்டாலின் மோதல் போக்கை மேற்கொண்டு தமிழக மக்களின் நலனை புறக்கணிக்கிறார் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக தமிழிசை குற்றம்சாட்டினார். திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் கொலை, ஆம்ஸ்ட்ராங் கொலை ஆகியவை இன்னும் விசாரிக்கப்படவில்லை. வேங்கைவயலில் மலம் கலந்த நீர் பிரச்சினைக்கு நீதி கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகார் வழக்கை முடித்ததாக ஸ்டாலின் பெருமை பேசுவதை நீதிமன்றத்தின் சாதனை என்று அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக தமிழிசை கவலை தெரிவித்தார். பள்ளிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் ஊழல் அதிகரித்துள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்ன ஸ்டாலின், இப்போது டாஸ்மாக்கை திறந்து வைத்து பேசுகிறார் என்று அவர் குற்றம்சாட்டினார். மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் பற்றாக்குறையை தமிழிசை சுட்டிக்காட்டினார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளது. காவலர்கள் பற்றாக்குறையால் பரீட்சைகள் தாமதமாகின்றன. தமிழக அரசு பற்றாக்குறையால் செயல்படுவதாக அவர் விமர்சித்தார்.
வேல்முருகனின் ஆபாச பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழிசை, விஜய்யின் கல்வி விருது விழாவில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியை பாராட்டுகிறேன். ஆனால் வேல்முருகன் மாணவர்களையும் பெற்றோர்களையும் அவமதித்தது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூன் 8 அன்று மதுரை வருகிறார். அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, வருங்கால அரசியல் திட்டங்களுக்கு வழிகாட்டுவார். இதற்காக பாஜகவினர் உற்சாகமாக உள்ளோம் என்று தமிழிசை தெரிவித்தார்.