திமுக மாவட்ட செயலாளர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பொதுமக்கள், வாக்காளர்கள் குறைகளை கேட்டு பொறுமையாக பதிலளிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை அதிகளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை திமுக, பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் கடந்த ஜூன் 1ம் தேதி மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘ஓரணியில் தமிழ்நாடு எனும் உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது’’ என அறிவித்தார். இதையடுத்து, வீடுவீடாகச் சென்று, வாக்காளர்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் அறிவித்த உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நேற்று மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்களுடனான கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவரது கருத்துகளையும் கேட்டு, தேர்தல் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது, ‘பொதுமக்கள், வாக்காளர்கள் கூறும் குறைகளை கேட்டு பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும். திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்து, 30 சதவீதம் வாக்காளர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்’ என்றும் அறிவுரைகளை ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், கூட்டம் தெடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆக்கப்பூர்வ ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம். 2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்க புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெற தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘கழகத்தின் வலிமையை மென்மேலும் கூட்டிட ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு, வீடாகச்சென்று மேற்கொள்ள வேண்டும் என மதுரை பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் ஒன்றை முதல்வர் முக..ஸ்டாலின் நிறைவேற்றினார். அதனைச் சிறந்த முறையில் செயல்படுத்த முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். இளைஞரணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எடு்த்துக்கூறி, உறுப்பினர் சேர்க்கைக்கும் இளைஞரணி தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் உரையாற்றினோம். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத்தொடர ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைக்க உறுதியேற்போம்’’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
முதன்முதலில் தொகுதி வரையறை தொடர்பாக குரல் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்பின் தான் பாதிக்கப்படும் மாநிலங்கள் எதிர்த்தன. இதனால் இங்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அப்பொழுது பாஜக கூட்டணியில் இல்லாதபோது ஆதரித்தார். ஆனால் தற்போது கூட்டணி வைத்ததும் அவர் வார்த்தைகளில் மாற்றம் தெரிகிறது. பாஜகவின் ஊது குழலாக பழனிசாமி தற்பொழுது பேசி வருகிறார். மேலும் பாஜக அரசு அவரை மிகவும் தந்திரமாக கையாண்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் 8 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தார். மோடி வந்த பிறகுதான் 40-க்கு 40 வெற்றி பெற்றோம். பிரதமர் மோடி பலமுறை வந்தபோதும் தமிழகத்தில் அவரது முயற்சிகள் ஜீரோவாகத்தான் இருந்தது. புதிதாக அரசியலுக்கு வரக்கூடியவர்கள் வரலாற்றினை படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.