கன்னட மொழி குறித்த பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் மூலம் கமல்ஹாசன் தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார், என செல்வபெருந்தகை தெரிவித்தார்.
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார். தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ சி.சரஸ்வதியின் வீட்டுக்குச் சென்று, அவரது மகள் கருணாம்பிகா குமாரின் மறைவுக்கு செல்வபெருந்தகை ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்வபெருந்தகை கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சரியான முறையில் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனையை விரைவாக பெற்று தந்துள்ளனர். இதனை பாராட்ட வேண்டும். தமிழ் மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், அதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். தமிழனாக தலைநிமிர்ந்து நிற்பதால் அவர் ரூ.25 கோடி இழப்பை சந்தித்துள்ளார். லாபத்தை பார்க்காமல் தன்மானத்தைப் பார்த்தார். இதனால் அவர் தலை நிமிர்ந்து நிற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.