தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சி வந்தால் தான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க் கட்சியாக சுட்டிக்காட்ட முடியும் என்றும், விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்தும் கரூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனியார் ஹோட்டலில் தங்கினார். அதைத்தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை காலை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

2026 இல் ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டதுதான். ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட, தனது வாக்குறுதிதான் முக்கியம் என்று எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, கூட்டணியா என்பது குறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

2026 இல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து அதனை சுட்டிக் காட்ட முடியும். திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். 234 தொகுதிகளுக்கும் 2 நாள்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் சரி செய்ய வேண்டும். குறிப்பாக, தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளைச் சம்பவம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.