“மோடி அரசின் 11 ஆண்டு கால ஆட்சியில் எந்தப் பொறுப்புணர்வும் இல்லை, ஆனால் வெறும் பிரச்சாரம் மட்டுமே உள்ளது” என்று தானே ரயில் விபத்து சம்பவத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 4 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர், 6 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
மோடி அரசு 11 ஆண்டு கால ‘சேவை’யை கொண்டாடும் அதே வேளையில், நாட்டின் யதார்த்தம் மும்பையில் இருந்து வரும் துயரச் செய்திகளில் பிரதிபலிக்கிறது. பலர் ரயிலில் இருந்து விழுந்து இறந்தனர். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு இந்திய ரயில்வே முதுகெலும்பாக உள்ளது. ஆனால், இன்று அது பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
மோடி அரசின் 11 ஆண்டுகளில் பொறுப்புணர்வு எதுவும் இல்லை, மாற்றம் எதுவும் இல்லை, பிரச்சாரம் மட்டுமே உள்ளது. மத்திய அரசு 2025 பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, இப்போது 2047 கனவுகளை விற்கிறது. இன்று நாடு என்ன பிரச்சினையை எதிர்கொள்கிறது என்பதை யார் பார்ப்பார்கள்? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இன்று காலை 9.30 மணி அளவில் ரயில் கசாரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்கள் எதிரெதிர் திசைகளில் சென்றபோது, இரண்டு ரயில்களிலும் நெரிசல் காரணமாக படிகளில் பயணித்த பயணிகளின் முதுகுப் பைகள் உரசிக் கொண்டதால் விபத்து ஏற்பட்டது. இதில் 10 பயணிகள் கீழே விழுந்தனர். ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்து கீழே விழுந்த பயணிகள் அனைவரையும் மீட்டு கல்வாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களில் 4 பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.