சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜியும் ஆஜராகியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றபத்திரிகையுடன் சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட வழக்கின் ஆவணங்களை காகித வடிவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்க நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் ஆஜராகியிருந்தனர். இதில் குற்றப்பத்திரிகை நகல் வாங்காத அசோக்குமார் உள்ளிட்ட 12 பேருக்கும் நேற்று குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. அப்போது குற்றப்பத்திரிகை ஆவணங்கள் சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் இருப்பதால் அவற்றை படித்துப்பார்க்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.பரணிக்குமார் உள்ளிட்டோர் கோரினர். அதையடுத்து நீதிபதி எஸ். கார்த்திகேயன் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.