முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகிறார்!

சேலத்தில் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் ‘ரோடு ஷோ’வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு சேலம் மாவட்டம் மேட்டூர் வருகிறார். அவருக்கு, மாவட்ட எல்லையான பவானி-மேட்டூர் சாலை நவப்பட்டி அருகே உள்ள பெரும்பள்ளம் பகுதியில் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மேட்டூர் வரை சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். தொடர்ந்து மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வருகிறார். காலை 11 மணிக்கு இரும்பாலை பகுதியில் உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.