குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளும் பாஜகவும், முதல்வர் ரேகா குப்தாவும் டெல்லி மக்களின் கோபத்தை எதிர்கொள்வார்கள் என்று ஆதிஷி விமர்சித்துள்ளார்.
தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது. ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சட்டவிரோத குடிசைகள் இடிக்கப்படவுள்ளதால், அவர்கள் வளாகத்தை காலி செய்வது அவசியம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “குடிசைகளை இடிக்கும்போது குடிசைகளுக்குள் எஞ்சியிருக்கும் அனைத்து பொருட்களும் அகற்றப்படும். தனிப்பட்ட சொத்துகளுக்கு ஏற்படும் எந்தவொரு சேதம் அல்லது இழப்புக்கும் நிறுவனம் பொறுப்பேற்காது. சீரான செயல்முறையை உறுதி செய்ய அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் ஒத்துழைக்க வேண்டும்” என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி கல்காஜி விரிவாக்கம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி, கலந்து கொண்டார். குடிசைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆதிஷி, “இந்த குடியிருப்புகளை பாஜக நாளை இடித்துத் தள்ளப் போகிறது. இந்த குடிசைவாசிகளுக்காக நான் குரல் எழுப்புவதால் இன்று நான் சிறையில் அடைக்கப்படுகிறேன். பாஜகவும் ரேகா குப்தாவும் குடிசைவாசிகளின் கோபத்தை எதிர்கொள்வார்கள். குடிசைகளில் இருப்பவர்கள் பாஜகவையும், ரேகா குப்தாவையும் சபிப்பார்கள். பாஜக இனி ஒருபோதும் தேர்தலில் வெற்றி பெறாது,” என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி பாஜக அரசு மக்களின் வீடுகள், கடைகள் மற்றும் அவர்களின் தொழில்கள் மீது “புல்டோசர்களை” ஏவுவதாக குற்றம் சாட்டினார்.
தென்கிழக்கு டெல்லியின் ஜங்புராவில் உள்ள மதராசி முகாம் ஜூன் 1-ம் தேதி இடிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், பாராபுல்லா வடிகால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். கனமழையின்போது ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்வு காண இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.