கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மூடா ஊழல் வழக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை ஒரு புறம் நடந்து வரும் நிலையில், சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துக்களை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுவரை இந்த வழக்கில் சித்தராமையாவின் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வராக சித்தராமையா உள்ளார். இவரது மனைவியான பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் (மூடா) நிறுவனமானது 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில், சட்டவிரோதமாக இந்த 14 வீட்டு மனைகளும் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. முடா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான், சித்தராமையாவின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 92 சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.100 கோடியாகும். இந்த வழக்கில் இதுவரை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்த சொத்துக்கள் அனைத்தும், வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் மூடா அதிகாரிகளின் பினாமி சொத்துக்கள் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், “அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ள இந்த 92 இடங்களும், ஏற்கனவே முடக்கப்பட்ட சுமார் 300 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 160 மனைகளின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.